பல வருடங்களாக, குழந்தைகள் அதிகமாகத் திரையைப் பார்ப்பதால்தான் கண்பார்வை குறைகிறது என்று பெற்றோர்கள் குறை கூறி வந்தனர். ஆனால், இப்போது மருத்துவர்கள் வேறு ஒரு முக்கியக் குற்றவாளியைச் சுட்டிக்காட்டுகிறார்கள்:

அதுதான் மாசுபட்ட நகரத்து காற்று. டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற அதிக மாசடைந்த நகரங்களில் உள்ள கண் மருத்துவர்கள், குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே கிட்டப்பார்வை (Myopia/Near-sightedness) ஏற்படுவதுடன், அது மிக வேகமாக அதிகரிப்பதையும் கவனித்துள்ளனர்.

இந்தியா உலகிலேயே மோசமான காற்று மாசுபாடு உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், மாசுபட்ட காற்று, குறைவான சூரிய ஒளி மற்றும் கண் எரிச்சல் ஆகியவை நகர்ப்புறக் குழந்தைகளின் கண்பார்வையைப் பாதிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சாதாரணமாக, குழந்தைகள் ஆரோக்கியமான கண் வளர்ச்சியைப் பெற பிரகாசமான வெளிப்புற சூரிய ஒளி மிக அவசியம். இது கண்ணில் உள்ள டோபமைன் சுரப்பைக் கட்டுப்படுத்தி, கிட்டப்பார்வை ஏற்படாமல் தடுக்கிறது. ஆனால், மாசுபட்ட நகரங்களில், காற்று மாசுபாடு சூரிய ஒளியின் பிரகாசத்தை வெகுவாகக் குறைக்கிறது.

இது இயற்கையான பாதுகாப்புக் காரணியை நீக்குகிறது. மேலும், சுகாதாரமற்ற காற்று காரணமாகக் குழந்தைகள் வெளியே விளையாடுவதைக் குறைத்து, அதிக நேரம் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதுவே கிட்டப்பார்வை ஆபத்தை அதிகரிக்கிறது.

காற்று மாசுபாட்டினால் ஏற்படும் PM2.5 போன்ற தீங்கு விளைவிக்கும் துகள்கள் கண்களை உறுத்துகின்றன. இதனால் குழந்தைகளுக்குக் கண் எரிச்சல், வறட்சி, அரிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. கண் மருத்துவர்கள், மாசுபட்ட காற்று கண்களை எரிச்சலடையச் செய்து, குழந்தைகள் அடிக்கடி கண்களைத் தேய்க்க வைக்கிறது. இதுவும் கிட்டப்பார்வைக்கு வழிவகுக்கும் அசாதாரண கண் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள். மேலும், அதிக மாசுபாடு காரணமாக வெளியே செல்வது குறைவதால், குழந்தைகள் அதிக நேரம் வீட்டிற்குள் திரை முன்பு செலவிடுகின்றனர். இதுவும் கிட்டப்பார்வை வேகமாக வளர முக்கியக் காரணமாகிறது.

எனவே, பெற்றோர்கள் குழந்தைகளைக் காக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காற்றுத் தரம் (AQI) குறைவாக இருக்கும் நாட்களில், அதாவது சுத்தமான நாட்களில், தினமும் 60 முதல் 90 நிமிடங்கள் வரை குழந்தைகள் வெளியே விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். வீட்டிற்குள் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும்.

மேலும், தொடர்ந்து திரையைப் பார்க்கும்போது, 20-20-20 விதி (20 நிமிடத்திற்கு ஒருமுறை, 20 விநாடிகள், 20 அடி தூரத்தில் உள்ள ஒன்றைப் பார்க்க வேண்டும்) யைப் பின்பற்ற வேண்டும். கண்பார்வை மங்குதல், கண் தேய்த்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.