அண்மைக்காலமாக மாறிவரும் உணவுப் பழக்கங்களால், பலரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதன் காரணமாக, மக்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் தங்கள் எடையைக் குறைக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த ஆர்வம் காரணமாக, இப்போது பெரும்பாலான நகரங்களில் மூலைக்கு மூலை உடற்பயிற்சிக் கூடங்கள் (ஜிம்) பெருகி வருகின்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள, பல ஜிம் நிர்வாகங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அப்படி ஒரு அதிர்ச்சி அறிவிப்பைச் சீனாவில் உள்ள ஒரு ஜிம் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதாவது, மூன்று மாதங்களுக்குள் 50 கிலோ உடல் எடையைக் குறைக்கும் நபருக்கு, சுமார் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு போர்ஷே (Porsche) கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சவாலில் கலந்துகொள்வதற்கு மட்டும் அனுமதி கட்டணமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும், சவாலில் பங்கேற்பவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகளையும் அந்த ஜிம் நிர்வாகமே வழங்குகிறது. இதனால், கார் மற்றும் எடைக்குறைப்பு ஆகிய இரண்டு இலக்குகளுடன் ஏராளமானோர் அந்த உடற்பயிற்சிக் கூடத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
இருப்பினும், இவ்வளவு குறுகிய காலத்தில் 50 கிலோ எடையைக் குறைப்பது என்பது உடல் நலத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக, உடற்பயிற்சிக் கூடங்கள் உடல் நலத்தைப் பாதுகாக்கவும், எடையைக் குறைக்கவும் உதவுகின்றன என்ற எண்ணம் மக்களிடையே உள்ள நிலையில், இந்தச் சீன ஜிம் நிர்வாகத்தின் அறிவிப்பு முழுக்க முழுக்க லாப நோக்கத்திற்காகவே செய்யப்பட்டுள்ளது என்று இணையதளவாசிகள் மத்தியில் தற்போது விவாதம் எழுந்துள்ளது. மக்களின் உடல்நலத்தை விடப் பணமே முக்கியம் என்று இந்த ஜிம் நிர்வாகம் கருதுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
