டெல்லி உயர்நீதிமன்றத்தின் மெய்நிகர் (ஆன்லைன்) நீதிமன்ற அமர்வின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பதிவானதாக கூறப்படும் அந்தக் காட்சியில், நீதிமன்றம் இன்னும் அமர்வில் இல்லாத நேரத்தில், ஒரு வழக்கறிஞர் தகாத  நடத்தையில் ஈடுபடுவதை காணலாம். சம்பவத்தின் போது நீதிபதி இன்னும் அமரவில்லை என்றும், வழக்குகள் தொடங்குவதற்காக வழக்கறிஞர்கள் காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணொளியில், அந்த வழக்கறிஞர் தனது அலுவலக அறையில் நீதிமன்ற உடையுடன் அமர்ந்திருப்பதும், கேமரா முன் நின்றிருக்கும் சேலை அணிந்த ஒரு பெண்ணின் கையை இழுப்பதும், பின்னர் அவருக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகளும்  பதிவாகியுள்ளன. அந்தப் பெண் எதிர்ப்புக் காட்டும் போதும், வழக்கறிஞர் தொடர்ந்து அவரைத் தொட முயல்கிறார்.

 

இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட இரு மணி நேரத்திற்குள் 89,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளன. வீடியோவில் காணப்படும் வழக்கறிஞர் மற்றும் பெண்ணின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் , சமூக ஊடகங்களில் பலர், “நீதிமன்ற ஒழுக்க விதிகளை மீறிய இந்த நடத்தை குறித்து தில்லி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.