சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளையும் இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு நடுத்தர வயது நபர், மெட்ரோ ரயிலின் இரண்டு பெட்டிகளை இணைக்கும் இடைவெளியில் அமர்ந்து சிறுநீர் கழிப்பதைப் பார்க்க முடிகிறது.

எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, பொது இடங்களில் ஒழுக்கத்தையும், விதிமுறைகளையும் மீறும் இந்தச் செயலால், மெட்ரோவின் ஒழுங்கு மற்றும் பயணிகளின் நாகரிகம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 3.33 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர், மேலும் இது எங்கு, எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.

வீடியோவில், வேஷ்டி அணிந்த அந்த நபர், அருகில் பயணிகள் இருக்கும் போதே, எவ்வித அச்சமும் இல்லாமல் சிறுநீர் கழிப்பதைக் காணலாம். இது பார்க்கும் பயணிகளை அதிர்ச்சியிலும் அசவுகரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, மெட்ரோ ரயில் ஒரு சுத்தமான, ஒழுங்கு மிக்க பொது போக்குவரத்தாகக் கருதப்படுகிறது,

ஆனால் இந்த சம்பவம் அந்த பிம்பத்தை உடைத்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ பரவியதும், பலர் இந்த நபரின் செயலுக்கு கோபமும், சிலர் அவரது அறியாமையை குற்றம்சாட்டியும் கருத்து தெரிவித்தனர். “இது மெட்ரோவா இல்லை வீட்டு கழிவறையா?” என்று சிலர் கிண்டலாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த சம்பவம், பொது இடங்களில் நாம் விதிகளை மதிக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இப்போது, மெட்ரோ நிர்வாகம் இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.