கான்பூரில் நடந்த கடும் பரபரப்பு சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நரமாவ் சின்ன பங்கர் பகுதியை சேர்ந்த அனுஜ் திவேதி என்ற நபர், நன்காரி குப்தா ஹோட்டல் அருகே உள்ள சகோதரர் ஜிம்முக்கு செல்வதற்காக சாலை வழியாக பயணம் செய்துள்ளார். அந்த நேரத்தில், ப்ரசாந்த் சிங் ரதோர் மற்றும் அவரது நண்பர்கள் காரில் மது அருந்திக் கொண்டிருந்ததோடு, சாலையை மறித்துப் நிறுத்தியிருந்தனர். அவர்கள் வண்டியை நகர்த்த பலமுறை ஹாரன் அடித்தும் சாலை விடப்படவில்லை.

 

இதையடுத்து, வண்டியில் இருந்து இறங்கி கண்டித்த அனுஜ் திவேதியுடன் வாக்குவாதம் அதிகமாகி, அதே நேரத்தில், ப்ரசாந்த் சிங் ரதோர் காரிலிருந்து வெளியே வந்து துப்பாக்கியை காட்டி “எல்லை மீறினா உயிரோட இருக்க மாட்ட” என மிரட்டினார்.

இந்த வீடியோவை அருகில் இருந்தவர்கள் பிடித்து வீடியோ எடுத்தனர். வீடியோவில் துப்பாக்கியுடன் மிரட்டும் ரதோர், துப்பாக்கியை பையில் வைத்த உடனே, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரை பிடித்து துப்பாக்கியை பிடுங்கியுள்ளனர்.

பின்னர் அனுஜ் திவேதி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் அந்த காரை கைப்பற்றி சோதனை நடத்த, அதில் மதுபாட்டில்கள், கத்திகள், ஹாக்கி குச்சி உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் மீட்கப்பட்டன. மேலும், வாகனத்திற்குள் மற்றொரு நபர் குடி போதையில் இருந்ததும் தெரியவந்தது.

கான்பூர் மேற்கு துணை ஆணையர் கபில்தேவ் சிங் தெரிவித்ததாவது, “கேல்யான்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த கார் வாகனச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.