மதுரை மாவட்டத்திலுள்ள எம். கல்லுப்பட்டியில்  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக அரசு விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் 15 மாணவர்கள் தங்கி உள்ளனர்.

அவர்கள் அனைவருமே கல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை விடுதியில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு திடீரென வாந்தி பேதி ஏற்பட்டு உள்ளது.

அதனால் பள்ளி ஆசிரியர்கள் ஏழுமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவர்களை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து அறிந்த உசிலம்பட்டி ஆர்டிஓ, தாசில்தார் மற்றும் சுகாதார துறையினர் அரசு விடுதியில் உள்ள உணவு மாதிரிகள் மற்றும் குடிநீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் விடுதியில் தங்கி படிக்கும் 15 மாணவர்களுக்கும் ஒரே சமயத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது குறித்த காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

மாணவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாகவும், இருப்பினும்  24 மணி நேரம் அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.