நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாரதி நகர் பகுதியில் பாண்டியன்-சகீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ராகுல் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவர் கோவையில் நர்சிங் படிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். அந்தப் பெண்ணும் வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது.

இதில் ராகுலுக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் அவரது காதலி அந்த பழக்கத்தை கைவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்தை நிறுத்தினால்தான் பேசுவேன் என காதலி கூறியதோடு செல்போனில் ராகுலிடம் பேசுவதையும் நிறுத்தினார்.

இந்நிலையில் சம்பவ நாளில் மது போதையில் இருந்த ராகுல் தன் காதலியிடம் பேசுவதற்காக போன் போட்ட நிலையில் அவர் மது குடித்திருந்ததை அறிந்த காதலி போனை எடுக்கவில்லை. இதனால் ராகுல் அவரது தோழிகளுக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய காதலியை பேச சொல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அவருடைய காதலி குடிப்பழக்கத்தை கைவிடாவிட்டால் எப்போதுமே பேச மாட்டேன் என கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனால் மனமுடைந்த ராகுல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.