
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சிர்யாலா மாவட்டம், லட்செட்டிபேட்டா நகராட்சிக்கு அருகிலுள்ள இடிக்யால் கிராமத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் கடந்த புதன்கிழமை காலை பெரும் விபத்து நிகழ்ந்தது. அந்த வழியாய் சென்ற 2 லாரிகள் எதிரெதிராக மோதியதில், ஒரு லாரி முழுமையாக நொறுங்கி விட்டது. மற்றொரு லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த லாரிகளில் ஒன்று பிரபலமான சோப்பு தயாரிப்பு நிறுவனமான ‘செந்தூர்’ சோப்புகளால் நிறைந்திருந்தது. விபத்து நிகழ்ந்தவுடன் அருகிலிருந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆனால் அந்த நேரத்தில், உயிரிழந்தவர் அல்லது காயமடைந்தவர்களுக்கு உதவுவற்குப் பதிலாக, சிலர் லாரியில் இருந்த சோப்பு பெட்டிகளை கொள்ளை அடிக்கத் தொடங்கினர்.
கண்கள் சிமிட்டும் நேரத்தில், லாரியில் இருந்த சோப்பு பாக்ஸ்களில் பாதி வரை மக்கள் எடுத்து சென்றனர். சுமார் சில லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டன. இச்ச்சம்பவத்தில் மக்கள் மனிதநேயத்தை மறந்து, நடந்து கொண்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலையை கட்டுப்படுத்தினர். அந்த நிலையில், உயிரிழந்த ஓட்டுநரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த செய்தி, விபத்தில் உதவுவதற்குப் பதிலாக கொள்ளை அடித்த மக்களின் செயல், “மனிதநேயமா ?” என்ற கேள்வியையும், நெறிமுறை விழிப்புணர்வின் தேவை பற்றிய கோணத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.