உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபாவில் ஆன்லைன் பப்ஜி (PUBG) கேம் மூலம் பழகிய பெண் ஒருவர், தன்னுடைய கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு அதில் பழகிய காதலனுடன் வாழ ஆசை தெரிவித்ததால், குடும்பத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மஹோபாவை சேர்ந்த ஆராதனா என்ற பெண்மணிக்கு 2022ம் ஆண்டு பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஷீலூ என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு தற்போது ஒரு வயதுக்குட்பட்ட குழந்தை இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கிய ஆராதனா, அந்த விளையாட்டின் வாயிலாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த சிவம் என்ற வாலிபருடன் பழகி அது காதலாக மாறியது.

சமீபத்தில், ஆராதனா தொலைபேசியில் காதலனை தொடர்பு கொண்டு , கணவர் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இதைக் கேட்ட சிவம், அவரை நேரில் சந்திக்க 1,000 கி.மீ. தூரத்தை கடந்து மஹோபா வந்துள்ளார்.

இதையடுத்து அவரது கணவரும் காதலனும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவம் நீதிமன்றத்திற்குத் கொண்டு செல்லப்பட்டபோது, அவரைப் பின்தொடர்ந்த ஆராதனா, “நான் என் காதலனுடன் வாழ விரும்புகிறேன், என் கணவர்  வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

பொதுமக்கள் முன்னிலையில் மனைவி, கணவர் மற்றும் காதலனிடையே சண்டை நடந்தது. இந்த நேரத்தில் ஆராதனா, “என் காதலனுக்கும் எனக்கும் இடையில் வந்தால், கணவரை மீரட் கொலை வழக்கில் நடந்தது போல 55 துண்டுகள் ஆக்கி டிரம்மில் போட்டுவிடுவேன்” எனக் கூறி மிரட்டினார்.

மேலும் கணவர் மது பழக்கத்தால் அடிக்கின்றார் என்றும் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.