ஹைதராபாத் குகட்பள்ளி பகுதியில் வேகமாக வந்த பொலேரோ சரக்கு வாகனம் மோதி பெண்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர் கிருத்திகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது கணவர் அமித் கரண், மூன்று வயது மகன் மாதவ் மற்றும் மாமியார் ஆகியோருடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

இந்த வழியிலேயே, அவர்களின் கார் திடீரென பழுதடைந்ததால், கிருத்திகா வெளியே வந்து சாலையின் நடுவே காரின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த பொலேரோ வாகனம் திடீரென அவர் மீது மோதியது.

இதனால் கிருத்திகா தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். விபத்தின்போது அருகில் இருந்த மூன்று வயது மகனும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளதுடன், பொலேரோ வாகனத்தின் ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் வாகனம் இயக்கியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.