மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் வெடித்து, அதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அமெரிக்க விமானப்படையால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பிறகு, இரு நாடுகளும் போர் நிறுத்தம் மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டின் த ஹேக் நகரில் நடக்கும் நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப், நிருபர்களிடம் பேசுகையில், “ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. அந்த இடங்களில் எதையும் மீட்பதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, அணு ஆயுத திட்டம் முடிந்துவிட்டது என நம்புகிறேன். ஆனால், அவர்கள் மீண்டும் அதை தொடங்க முயன்றால், இந்த முறை இன்னும் மோசமான தாக்குதலுக்கு தயாராக இருக்கட்டும்,” என கடுமையாக எச்சரித்தார்.

மேலும், “வெறும் போர் நிறுத்தம் போதாது, உண்மையான தீர்வு வேண்டும். அதற்காக ஈரான் அணு ஆயுத திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். இதுபற்றி அடுத்த சில நாட்களில் மேலும் தகவல் தெரிந்துவிடும்,” எனவும் அவர் கூறினார்.

அமெரிக்க உளவுத்துறையின் தகவலின்படி, தாக்குதலுக்கு முன் ஈரான் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இஸ்ரேல் – ஈரான் சண்டையை “பள்ளி வளாகத்தில் கட்டிப்புரண்டு சண்டையிடும் பிள்ளைகளைப் போல” எனக் கூறிய டொனால்டு டிரம்ப், அவர்களை கட்டுப்படுத்த கடுமையாக நடந்து கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.