
கர்நாடக மாநிலம் ஒசஹள்ளி பகுதியில் சைதன்யா என்ற பெண் தனது தாய் சவுபாக்கியாவுடன் வசித்து வருகிறார். சவுபாக்யா அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் சைதன்யா அருகில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். அழகு கலை நிபுணராக இருக்கும் சைதன்யா ரீல்ஸ் வீடியோக்கள் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் பழக்கம் உள்ளவர்.
இவர் ராமேனஹள்ளி பகுதியில் வசித்து வரும் விஜய் என்ற நபரை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதல் கதை சவுபாக்யாவுக்கு தெரிய வந்த நிலையில் அவர் சைதன்யாவை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் தனது தாய்க்கு தெரியாமல் விஜயிடம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுவது விஜய்க்கு பிடிக்காததால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சம்பவ நாளில் சைதன்யா புகைப்பட கலைஞர் ஒருவரை சந்தித்த போது அவருடன் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் எடுத்த நிலையில் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த விஜய் கோபமடைந்த நிலையில் சைதன்யாவின் வீட்டிற்கு சென்று அவருடைய தாயிடம் கூறினார். இதனால் அவரின் தாய் அவரை திட்டிய நிலையில் அவர் தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்.
அதன் பின் விஜய்க்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்யப் போகிறேன் என்று கூறினார். அவர் கூறியதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த விஜய் வீட்டிற்கு சென்று கதவை திறக்குமாறு தட்டினார். ஆனால் சைதன்யா கதவை திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற நிலையில் சைதன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதை பார்த்து விஜயும், சைதன்யாவின் தாயாரும் மிகவும் அதிர்ச்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சைதன்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது காதலனுக்கு பிடிக்காமல் அவர் கண்டித்ததால் தற்கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.