செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தில் ராஜா (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்துள்ளார். அதில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படமும் மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சொந்தமான வாலிபரை தேடினர். இதையடுத்து காவல்துறையினர் ராஜா என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.