
ராஜஸ்தான் மாநிலம் மனாவர் தாலுகாவின் சிங்கானா கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியை கவிதா கோச்சே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் பள்ளிக்கு குடிபோதையில் வந்த ஆசிரியை, அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, “நீ ஏதாவது சொன்னா உன்னை அடிப்பேன்… இது என் பள்ளி” என கூச்சலிட்டதைக் காணும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளி மாணவர்களும் ஊழியர்களும் அதனை நேரில் கண்டதால், அவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் முதல்வர் மற்றும் மற்ற ஆசிரியர்கள் இணைந்து, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அந்தக் புகாரில், கவிதா கோச்சே கடந்த சில மாதங்களாகவே குடிபோதையில் பள்ளிக்கு வந்திருப்பதுடன், மாணவர்களின் முன்னிலையில் மோசமான வார்த்தைகள் பேசும் பழக்கமும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கவிதாவால் மாணவர்களின் ஒழுக்கமும் மனவளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக பள்ளி ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒரு ஆசிரியையின் ஒழுக்கக்கேடான நடத்தை பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கங்கள் குறித்து பெற்றோர்களிடமும் கவலை எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னதாகவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டும், முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதே ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கூற்று. சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் சிங்கானா பகுதிக்கு திடீர் ஆய்விற்கு வந்தபோது, இந்த விஷயம் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து, மனவார் தொகுதியில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, ஒழுங்கின்மை, நிர்வாகத்தின் கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போன்ற பிரச்சனைகளைவிரைவில் சரிசெய்ய வேண்டும் எனக்கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல், ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் நடக்கும் கல்வி சூழல் உருவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பெற்றோர்களின் வலியுறுத்தலாக இருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.