உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், தனது காதலியை சந்திக்கச் சென்றதற்காக ஒரு இளைஞர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புராணா கஸ்பா பகுதியில் உள்ள ஏக்தா காலனியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், திருமண நிகழ்ச்சிக்கு மத்தியில் அந்த இளைஞர் கயிறுகளால் கட்டப்பட்டு, ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலைப் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தகவலின்படி, சம்பவம் நடந்தபோது அந்த குடும்பத்தில் ஹல்டி விழா நடந்துகொண்டிருந்தது. இளைஞர் தனது காதலியை சந்திக்க வந்திருந்த போது, பெண்ணின் குடும்பத்தினர் அவரை கட்டிவைத்து, கடுமையாக தாக்கினர். பின்னர் அவரை கயிறால் கட்டி, மிருகத்தை போல் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திகைத்த நிலையில் காணப்பட்டனர். வீடியோவில் அந்த இளைஞன் மிகவும் துயரமாக இருந்ததையும், அவமானத்தால் தலைகுனிந்திருந்ததையும் காண முடிகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர். பாதிக்கப்பட்ட இளைஞரின் சகோதரர், சந்தையில் இருந்து திரும்பும் வழியில் சிலர் தன்னுடைய சகோதரனைத் தடுத்து வைத்து தாக்கினர் என்று போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழக்கூடாது என்றும், மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.