
மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் மிகுந்த கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்றுவரும் மோதல், நேற்று முக்கிய திருப்பத்தை எட்டியது. அமெரிக்கா தனது ராணுவ விமானங்கள் மற்றும் கடற்படை மூலம் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி வளாகங்களை வெடிகுண்டுகளால் நேரடியாக தாக்கியது. இதனால் அந்த தளங்கள் முற்றிலும் அழிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் சில மணி நேரத்திலேயே இஸ்ரேலை நோக்கி “கொரம்ஷார் – 4” எனப்படும் சக்திவாய்ந்த ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியது. 2,000 கி.மீ. தூர இலக்குகளைத் தாக்கக்கூடிய இந்த ஏவுகணை, 1,500 கிலோ வெடிபொருளுடன் அமைக்கப்பட்டதாகவும், கூடுதலாக பல வெடிபொருட்கள் சேர்க்கப்பட்டதாகவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்த ஏவுகணையின் பெயர், 1980-களில் நடந்த ஈரான் – ஈராக் போர் நினைவாக “கொரம்ஷார்” என பெயரிடப்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் குடியிருப்புகள், வங்கிகள், கடைகள் உள்ளிட்ட இடங்கள் சேதமடைந்தன. சாலைகள் இடிந்து கட்டடக் குவியல்களில் மாட்டியதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 83 பேர் காயமடைந்தனர், அவர்களில் சிலர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்த முயன்றும், சில ஏவுகணைகள் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், பிராந்தியத்தில் சூழ்நிலை மிகுந்த பதற்றமடைந்து, இனி என்ன நடக்கும் என்பது குறித்து உலக நாடுகள் கவலையை முன் வைத்துள்ளன.