
பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. பாமக கட்சியின் தலைவர் நான்தான் என ராமதாஸ் கூறியுள்ள நிலையில் அன்புமணியை செயல் தலைவராக அறிவித்துள்ளார். ஆனால் அன்புமணி நான் தான் தலைவர் என்று கூறுகிறார்.
அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ராமதாஸ் நான் உயிரோடு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவராக இருப்பேன் என்றும் அரசியலில் வாரிசு கிடையாது என்பதால் எனக்குப் பிறகு யாரை வேண்டுமானாலும் தலைவராக நியமிப்பேன் என்றும் கூறியுள்ளதோடு பாமக கட்சியின் பொதுச் செயலாளரையும் மாற்றியுள்ளார். இதனால் பாமக தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மோதல் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து இயக்குனர் தங்கர்பச்சான் பேட்டி அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், தலைவர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு மற்றும் மோதல் போக்கு என்பது கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கு தான். இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை பிரிப்பதற்காக அல்ல.
இந்த மோதலில் பின்னடைவுகள் ஏற்படாது. இருவருடைய கட்சியில் பின்னடைவுகள் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் சில விஷயங்கள் நடக்கிறது. பாமக கட்சியின் முன்பை விட இப்போது பலமாகி வருகிறது. மேலும் தற்போது உள்ள சூழலில் கண்டிப்பாக பாமகவின் வாக்காளர்கள் யாரும் சிதற மாட்டார்கள் என்று கூறினார்.