
சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசு ஒரு புதிய வரைவுச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. “கர்நாடக தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகள் (தடை) மசோதா, 2025” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மசோதா, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை கட்டுப்படுத்தி, பொது அமைதி, சுகாதாரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பதுதான்.
இந்த மசோதாவின் கீழ், போலிச் செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்களுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்படும். குறிப்பாக, ஒருவர் தவறான செய்திகளை தப்பான நோக்கமுடன் பரப்பியதாகக் கண்டறியப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கலாம் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பொதுமக்களிடையே பொய்யான தரவுகள் பரவுவதை தடுக்கும் வகையில் மிகுந்த தீவிர முயற்சியாக கருதப்படுகிறது.
மேலும், இந்த சட்டத்தின் அமலாக்கத்துக்காக, மாநில அரசு “போலிச் செய்திகளுக்கான ஒழுங்குமுறை ஆணையம்” ஒன்றை உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் கன்னடம் மற்றும் கலாச்சாரம் துறை அமைச்சர், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஊடகத் தளங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி செயலாளராக செயல்படுவார்கள். இதன் மூலம் சமூக ஊடகத்தில் பரவும் தகவல்களை மையமாக்கி நேரடியாக கண்காணிக்க முடியும்.
மசோதாவில் போலிச் செய்திக்கு வழங்கப்பட்டுள்ள வரையறையும் குறிப்பிடத்தக்கது. “போலிச் செய்தி என்பது உண்மையைத் திருப்பித் தவறாக முன்வைப்பது, திருத்தப்பட்ட ஆடியோ/வீடியோ மூலமாக பொது மனதை பாதிப்பது அல்லது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட தகவல்களை பரப்புவது” என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், கர்நாடக மாநிலம் போலிச் செய்திகளை சட்டத்தால் கட்டுப்படுத்தும் முதல் மாநிலமாக மாறும்.
மேலும் இந்த மசோதாவுக்கு எதிர்வினைகள் எழுவதற்கும் வாய்ப்பு உள்ள நிலையில், இதன் நடைமுறை அமலாக்கம் எவ்வாறு நடைபெறும் என்பது எதிர்வரும் நாட்களில் தெளிவாகும்.