வருகிற ஜனவரி 2026 ஆம் ஆண்டு முதல் புதிதாக வாங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வசதி இல்லை.

இந்த வசதி இருந்தால் திடீரென பிரேக் பிடிக்கும்போது இரு சக்கரங்கள் லாக் ஆவது தவிர்க்கப்படும். இதனால் விபத்துக்கள் குறையும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது 125 சிசிக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களில் மட்டும் ஏபிஎஸ் வசதி உள்ளது. தற்போது புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்குபவருக்கு ஒரு ஹெல்மெட் மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆனால் வருகிற 2026 ஆம் ஆண்டு முதல் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்குவோருக்கு 2 ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. உலக அளவில் அதிக விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை இருசக்கர வாகன விபத்துக்களால் நடக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஹெல்மெட் இல்லாமல் செல்வதாகும். தற்போது வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் ஆகிய இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய மத்திய அரசு மேற்கொண்ட புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.