கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு NIA அமைப்பினர் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே பெரிய கலையம்பத்துறை சேர்ந்த ராஜா முகமது(35) என்பவர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த விசாரணையில் ராஜா முகம்மதுவிடமிருந்த செல்போன், லேப்டாப், ஹார்ட்டிஸ்க்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த ராஜா கொரோனா காலகட்டத்தில் அரபி மொழியை ஆன்லைனில் கற்றுக் கொண்டிருந்தார். இது தொடர்பாக சில புத்தகங்களையும் ஆன்லைனில் வாங்கியுள்ளார்.

அப்போது ஆன்லைன் வகுப்பில் பாகிஸ்தானில் இருந்து அரபி மொழி கற்றுக் கொடுத்தவர்களில் சிலர் தற்போது இந்த விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர். அதில் ராஜா முகம்மதும் ஒருவர். இந்நிலையில் ராஜா முகமதின் வீட்டிற்கு NIA அதிகாரிகள் மீண்டும் வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ராஜாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் பழனி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மேல்விசாரணைக்காக கோயம்புத்தூருக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா? என்பது குறித்த முழு விவரமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.