பீகாரின் பாட்னா விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த நந்தகுமார் திவாரி என்பவரின் செக்-இன் பையில் இருந்து ரூ.22,800 பணம் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து அவர் ஏர் இந்தியா மற்றும் காவல்துறையிலும் புகார் அளித்திருந்தாலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நந்தகுமார் திவாரி, பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏர் இந்தியா விமானம் (AI 2633) மூலமாக டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு பயணம் செய்துள்ளார். விமான பயணத்தை முடித்து செக்-இன் பையை எடுத்தபோது, அதில் இருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது.

பையில் இரண்டாயிரம் ரூபாய் மட்டும் மீதமிருந்ததாகவும், மொத்தமாக ரூ.22,800 பணம் திருடப்பட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து ஏர் சேவா போர்ட்டலுக்கும், பாட்னா மற்றும் டெல்லி ஏர் இந்தியா அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

விவகாரம் தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்னா விமான நிலைய காவல் நிலைய பொறுப்பாளர்கள் கூறியதாவது, பயணியின் புகாரின்பேரில் பையின் ஸ்கேன் மற்றும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுடன், முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.