
பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டம் நாபா தொகுதியில் உள்ள சன்னா நாதுவாலா கிராமத்தில், 15 வயது சிறுமியை அவரது தாயும், பாட்டியும் சேர்ந்து மூன்று லட்ச ரூபாய்க்கு விற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த நபருக்குத் தங்கள் மகளைக் விற்றதுடன், அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான வீடியோவில், சிறுமியின் தாய் 500 ரூபாய் நோட்டுகளை எண்ணும் காட்சியும் வெளியாகியுள்ளது.
சிறுமியின் பாட்டி சரஞ்சித் கவுர் பதசன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய் கிரஞ்சித் கவுர் மற்றும் பாட்டி குர்மீத் கவுரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட மற்ற நான்கு நபர்கள் – ஜஸ்விந்தர் கவுர் , குல்விந்தர் சிங், அஜைப் சிங் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில், கிரஞ்சித் கவுர் பால்ஜித் சிங் என்பவரை 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த 2022ல் அவர் தன கணவரை விவாகரத்து செய்துள்ளார். அதன் பிறகு, ஆகஸ்ட் 2024ல் தனது மாமியார் வீட்டிற்கு திரும்பிய கிரஞ்சித், பொய் வழக்குகள் மூலம் அவர்களை மிரட்டி குழந்தையுடன் அங்கு வாசிப்பதற்காக, தாயுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி, தனது மகளை ராஜஸ்தானில் மூன்று லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார். அதாவது மகளை விற்பனை செய்துவிட்டு அந்த பழியை கணவன் குடும்பத்தினரும் மீது போட அந்த பெண் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வதந்திகள் வெளியானதையடுத்து, போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, ராஜஸ்தானில் இருந்து சிறுமியை மீட்டனர். சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுமி பாதுகாப்புடன் இருப்பதாகவும், ஆலோசனையுடன் மனநல சிகிச்சையும் அளிக்கப்படுவதாக டிஎஸ்பி மந்தீப் கவுர் சீமா தெரிவித்தார். குற்றவாளிகள் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 143 (1), 61 (2), 9, 10, 11 மற்றும் குழந்தை திருமண தடைக் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.