
கர்நாடகாவில் உள்ள கதக் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சதீஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மது ஸ்ரீ (25) என்ற பெண்ணும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மது ஸ்ரீயை பெற்றோர் தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி மது ஸ்ரீ உறவினர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதலன் சதீஷ் மீது சந்தேகம் இருப்பதாக பெண்ணின் வீட்டார் தெரிவித்தனர்.
இதையடுத்து சதிஷை காவல்துறையினர் அழைத்து விசாரித்தபோது தனக்குத் தெரியாது என்று கூறி விட்டார். இருப்பினும் போலீசாருக்கு சதீஷ் மீது சந்தேகம் இருந்தது. இதனால் அவரது நடவடிக்கையை காவல்துறையினர் கண்காணித்தனர். இந்நிலையில் 6 மாதம் கழித்து கடந்த 13 ஆம் தேதி சதீஷ் மது ஸ்ரீ மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற வீடியோ கிடைத்தது. அதை வைத்து சதீஷ் இடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மது ஸ்ரீ கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதாவது சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மது ஸ்ரீயை அழைத்துச் சென்ற அவர் தனது தோட்டத்தில் தங்க வைத்தார். இந்நிலையில் ஜனவரி 12ஆம் தேதி மதுஸ்ரீ, சதீஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் துப்பட்டாவால் மது ஸ்ரீயை கழுத்தை நெரித்து கொன்றார். அதன் பின் அவரது உடலை தோட்டத்தில் குழி தோண்டி புதைத்துள்ளார். மேலும் உடல் எலும்பு கூடாக மாறியது. அதைத் தோண்டி எடுத்து வெவ்வேறு இடத்தில் புதைத்து வைத்தது தெரிய வந்தது.
இவ்வாறு கடந்த 6 மாதமாக செய்து வந்தது தெரிய வந்தது. தற்போது அவர் கொடுத்த தகவலின் பெரும் மது ஸ்ரீயின் எலும்புக்கூடுகளை கைப்பற்றியுள்ள காவல் துறையினர் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கைதான சதீஷிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.