அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதி மீது விமானம் விழுந்ததும், பயங்கரமாக வெடித்து சிதறியது.

இந்த பேரழிவில் பலியானவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனும் ஹோட்டல் முதலாளியுமான ஜாவேத் அலி (37) மற்றும் அவரது மனைவி மரியம் (35), மகன் முகல் ஜைன் (8), மகள் அமினா (4) ஆகியோர் அடங்குவர்.

ஜாவேத் தனது குடும்பத்தினருடன், மும்பையில் உள்ள தனது நோய்வாய்ப்பட்ட தாயாரை பார்வையிட இந்தியா வந்தார். தாயை சந்தித்த பிறகு லண்டனுக்குத் திரும்பும் பயணத்தில்தான் விபத்து ஏற்பட்டது.

உடல்களை அடையாளம் காண ஜாவேத் அலியின் தாய்மாமா அயூப் கான் ஆகியோர் அகமதாபாத்திற்கு வந்து, டிஎன்ஏ மாதிரி கொடுத்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம், சோதனை முடிந்து 72 மணி நேரத்திற்குப் பிறகு உடல்கள் விதிகளின்படி ஒப்படைக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, உறவினர்களுக்கும் பொதுமக்களுக்கும் நுழைவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.