குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டிலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில் 241 பேர் உயிரிழந்தனர்.

அதன்பிறகு கல்லூரி மருத்துவ கட்டிடத்தின் மேல் விழுந்ததால் அங்கிருந்தவர்களும் உயர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் கல்லூரி விடுதியில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் வெளிவரவில்லை.

இந்நிலையில் குஜராத் விமான விபத்திற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது கவலை அளிக்கிறது. இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என்னுடைய எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதேபோன்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான பிலாவல் பூட்டோ ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.