அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்திலுள்ள நியூவர்க் லிபர்டி விமான நிலையத்தில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிறுவன் விமானத்தில் ஏறியதபோது, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி தரையில் தள்ளிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட இந்தியர் ஒருவர், அந்த சிறுவன் கடும் மனஉளைச்சலில் இருந்ததாகவும், கண்ணீர் வடித்தபடியே அடக்குமுறைக்கு உள்ளானதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் ஜூன் 7ஆம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ‘கனால் ஜெயின்’ என்ற இந்தியர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், “இந்திய மாணவன் ஒருவரை கைதி போல் நடத்தி, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் அவரை அமுக்கி தரையில் வைத்திருந்தனர். அவன் கனவுகளுடன் அமெரிக்கா வந்தவன், குற்றவாளி அல்ல. இது ஒரு மனித உரிமை மீறல்” என பதிவிட்டுள்ளார்.

 

சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோவில், அந்த சிறுவன், “நான் பைத்தியம் கிடையாது… இவர்கள் என்னை பைத்தியமாக்க முயல்கிறார்கள்” என்று வேதனையுடன் கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோவிற்கு பலரும் பதிலளித்து, இந்திய தூதரகமும், வெளிவிவகார அமைச்சகமும் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு தற்போது வரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.