மகாராஷ்டிராவின் புனே நகரத்தில் ஏழை தெருவோர விற்பனையாளர்களை பெண் தாதா ஹினா ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் சோயிப் ஜமாதர், சோயிப் படேல் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எஃப்சி சாலையில் வியாபாரம் செய்து வரும் ஒரு விற்பனையாளர், கடந்த சில நாட்களில் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை பலமுறை பணம் கொடுத்ததாகவும், மொத்தத்தில் ரூ.10,000 வரை பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விற்பனையாளர், “பணம் இல்லை” என்று கூறியதும், ஹினா ஷேக் கடுமையாகச் செயல்பட்டு, அவரது பொருட்களை சாலையில் வீசி எறிந்து, அருகில் இருந்த சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அருகிலிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் ஹினா ஷேக், “என்னிடம் எதுவும் நடக்காது” என வன்மையாக கூறுவது காணப்படுகிறது. இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் ஹினா ஷேக்கின் அட்டூழியத்திற்கு எதிராக டெக்கான் காவல் நிலையத்தில் விற்பனையாளர் புகார் அளித்திருந்தாலும், தாக்குதலுக்குப் பிறகு அவர் மீண்டும் போலீசாரிடம் சென்று நீதி கேட்டபோது, அவரை திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது காவல்துறையின் அலட்சியத்தை காட்டுவதாகவும், தெருவோர வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.