
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுக்குப் பிறகு, உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளார். “தி அமெரிக்கன் பார்ட்டி” என்ற பெயரில் இந்தக் கட்சியை அவர் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது சமூக ஊடகமான எக்ஸ் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். நாட்டில் நடக்கும் அரசியல் மோசடிகள் மற்றும் கட்சி அடிப்படையிலான கருத்து வேறுபாடுகள் நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதாகவும், அதனை மாற்ற புதிய திசையை ஏற்படுத்தவே இந்த முயற்சி என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முன்னதாக நடத்திய கருத்துக்கணிப்பில் 80 சதவீதம் பேர் ஆதரவு கொடுத்தனர்.
எலன் மஸ்க், சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான “மேக் அமெரிக்கா கிரேட் அகேன்” இயக்கத்திற்கெதிராக பலவித விமர்சனங்களை எழுப்பினார். செலவினக் கட்டுப்பாடுகள், அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சமூக விருத்திகளைப் பற்றிய அவரது கருத்துக்கள், டிரம்புடன் நேரடி மோதலாக மாறியது. இந்த நிலையில், திடீரென புதிய அரசியல் கட்சி அறிவிப்பு, அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது வருகிற ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது சக்தியாக உருவாகும் என்ற கருத்தும் பரவுகின்றது.
தி அமெரிக்கன் பார்ட்டி கட்சி மூலம், மக்கள் மைய அரசியலை கொண்டு வருவதே தன் நோக்கமாக இருப்பதாக மஸ்க் கூறியுள்ளார். அரசியலில் நேர்மை, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்காக செயல்படும் ஆட்சியை உருவாக்கவே இந்த புதிய கட்சி முயற்சி மேற்கொள்கின்றது. இதன் மூலம், யாருக்கும் சார்பில்லாத, புதிய தலைமுறை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.