திருச்சி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் சிந்தலவாடியைச் சேர்ந்த விவசாயி ரெங்கநாதன் (வயது 43) கடந்த 2017-ம் ஆண்டு கடன் பிரச்னையால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உறவினர்கள் அவரை முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அங்கு 15 நாட்கள் சிகிச்சை அளிக்கபட்டதுடன், ரெங்கநாதனின் குடும்பம் ₹9 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை செலுத்தியது.

சிகிச்சையின் போது ரெங்கநாதனுக்கு தொண்டை அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழாய் பொருத்தப்பட்ட நிலையில், அதன்பின் அவர் இரு கண்களிலும் பார்வையை முழுமையாக இழந்தார்.

இதனால், மீண்டும் அவரை மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றி வந்த நிலையில், தவறான சிகிச்சை காரணமாகவே பார்வை இழந்தது உறுதியாகி, ரெங்கநாதன் திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணையிலிருந்த வழக்கில், நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்து, தவறான சிகிச்சை மற்றும் சேவை குறைபாடு காரணமாக ரெங்கநாதனுக்கு ₹30 லட்சம் இழப்பீடு, ₹9.91 லட்சம் மருத்துவ செலவுக்காக, ₹10 ஆயிரம் வழக்கு செலவாக, மொத்தம் ₹39.91 லட்சம் தொகையை 45 நாட்களுக்குள் 9% வட்டியுடன் வழங்குமாறு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மருத்துவமனைகளின் பொறுப்பில்லாத செயலில் உயிரும் பார்வையும் இழக்க நேரிடும் என்பதை நினைவுறுத்தும் முக்கிய தீர்ப்பாக இது காணப்படுகிறது.