உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையன்று நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கௌரி பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உதோபூர் கிராமத்தைச் சேர்ந்த இஷ் முகமது (60) என்ற மதநம்பிக்கையுடன் வாழ்ந்த முதியவர், பக்ரீத் தொழுகைக்குப் பிறகு, ஒரு ஆட்டுக்கு பதிலாக தன்னைத்தானே தியாகம் செய்யும் முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டார்.

சனிக்கிழமை காலை தொழுகையை முடித்தபின், இஷ் முகமது தனது வீட்டிற்கு அருகிலுள்ள குடிசைக்கு தனியாக சென்றார். சிறிது நேரத்தில் அவர் கடுமையான அலறல் சத்தத்துடன் வெளியே வந்ததால், குடும்பத்தினர் உடனடியாக ஓடி சென்று பார்த்தனர்.

அங்கு அவர் தன்னுடைய கழுத்தை கத்தியால் வெட்டிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில், ஆடுகளை பலியிட பயன்படுத்தப்படும் கத்தியும் கிடந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையிலும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

இதற்கு முன், இஷ் முகமது மாவட்ட நிர்வாகத்திற்கும், கிராமத் தலைவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “ஒரு மனிதன் ஒரு ஆட்டைப் மகனைப் போல வளர்த்து பலியிடுகிறான். அதுவும் ஒரு உயிரினம். எனவே, இந்த சூழ்நிலையில், நான் அல்லாஹ் ரசூலின் பெயரால் என்னைத் தியாகம் செய்கிறேன். யாரும் என்னைக் கொல்லவில்லை. என்னை நிம்மதியான அடக்கம் செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இஷ் முகமது, மத உணர்வில் இயங்கி வந்தவராகவும், அம்பேத்கர் நகரில் உள்ள தர்காக்களுக்கு அடிக்கடி சென்று வந்தவராகவும் தெரிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அங்கிருந்து வீடு திரும்பிய அவர், பக்ரீத் அன்று மன அழுத்தத்தில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், இது தற்காலிக உணர்ச்சியில் செய்யப்பட்ட நடவடிக்கையல்ல என்றும், நிதானமாக திட்டமிட்ட முடிவாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக தியோரியா மாவட்ட போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு மத உணர்வின் பெயரில் ஒருவர் தன்னைத்தானே பலி கொடுத்த சம்பவம், பக்தி மற்றும் நம்பிக்கையின் எல்லைகளை மீறியிருப்பதாகவும், இதுபோன்ற செயல்கள் சமூகத்தில் தவறான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.