உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்ட அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதாவது அவ்னிஷ் பால் என்ற நோயாளியின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திடீரென வெடித்து தீப்பிடித்ததால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிச்சத்தைக் கேட்ட மருத்துவமனை ஊழியர்களும், மற்ற நோயாளிகளும் அச்சமடைந்தனர்.

அவ்னிஷ் பால் என்பவர் லக்னோவுக்குச் செல்லும் வழியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, பாராபங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை நடைபெற்று வந்த வேளையில், அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போனில் திடீரென புகை வெளியானது. மொபைலை எடுக்க முயன்ற நிலையில், அது வெடித்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு சிலிண்டரின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மொபைல் போனில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மொபைல் மோட்டோரோலா நிறுவனத்துக்குட்பட்டதாகவும், அதில் உள்ள திடீர் கோளாறே தீப்பிடிக்கக் காரணமாக இருக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.