மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம், முரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிகோனியா பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் சமூகத்தை உலுக்கியுள்ளது. அதாவது ஒரு தொழிலாளியின் 8 வயது மகனை, வெறும் 20 ரூபாய் கொடுத்து சட்டவிரோத மின் இணைப்பை இணைக்கச் சொல்லி, சாக்கடையில் இறக்கச் சொன்னதால், சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவா குஷ்வாஹா என்ற பெயருடைய அந்த சிறுவன், ஒரு டெண்ட்-டிஜே ஆபரேட்டரால் பணம் கொடுத்து சாக்கடையில் இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் 20 ரூபாய் கொடுத்து, மின் இணைப்பு பிடிக்கும்படி கூறப்பட்டதாம். அதே நேரத்தில், மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவத்தின் முழுக் காட்சியும் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ஹேமந்த் மற்றும் மனோஜ் ஜாதவ் என்கிற இருவரை முரார் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள்மீது மேலும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால், பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

சிறுவனின் குடும்பத்தினர் மிகவும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். “ஒரு  உயிரை வெறும் 20 ரூபாய்க்கு இழக்க வேண்டிய அவலம் எதற்காக?” என அவர்கள் கேட்கின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.