
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் அதிர்ச்சியூட்டும் ஒரு வழக்கு வெளியாகியுள்ளது. அதாவது அயோத்தியைச் சேர்ந்த நரேந்திர துபே என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சுமார் மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அவர் மீது ரயிலில் ஏற்பட்ட தகராறில், ஒரு நபரை தள்ளி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அதில், இறந்ததாக கூறப்பட்ட நபர் பீகாரைச் சேர்ந்த எட்டாப் என அடையாளம் காணப்பட்டார். அவரது குடும்பத்தினர், அந்த உடலை எட்டாப்பாகவே அடையாளம் காட்டினர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில் எட்டாப் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அந்த வீடியோவில், அவர் பீகாரில் உள்ள தன் வீட்டில் இருப்பது பதிவாகி இருந்தது. மேலும், அந்த நேரத்தில் அவர் குஜராத்தில் வேலை பார்த்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த வீடியோவை வழக்கறிஞர் பால் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பித்ததின் பின்னர், நீதிமன்றம் விசாரணை நடத்தி உண்மை நிலையை உறுதி செய்தது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், எட்டாப் நேரில் வந்து சாட்சியம் அளித்தார். அதில், “நான் தான் எட்டாப், நான் உயிருடன் இருக்கிறேன். எந்தத் தாக்குதலும் என் மீது நடத்தப்படவில்லை. நான் உயிரோடு தான் இருக்கிறேன்” என கூறினார். இதையடுத்து, கூடுதல் மாவட்ட நீதிபதி பங்கஜ் குமார் ஸ்ரீவஸ்தவா, நரேந்திர துபே மீது இருந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் நீதித்துறையின் நேர்மையை எடுத்துக்காட்டினாலும், நரேந்திர துபே 3 ஆண்டுகளாக குற்றமே செய்யாமல் சிறையில் இருந்தது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.