உத்தரப்பிரதேசம், மீரட் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு உணர்ச்சிபூர்வ சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ‘மினி’ என்ற செல்ல நாய், விஷப்பாம்புடன் போராடி தனது உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றி வீர மரணம் அடைந்தது. இந்த சம்பவம் மே 2-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மீரட்டிலுள்ள விவசாயி கல்லுவின் வீட்டில் நடந்தது.

அப்போது, குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம், மிகவும் விஷமுள்ள ரஸல் வகை பாம்பு வீட்டுக்குள் நுழைந்தது. அதை முதலில் கவனித்த மினி என்ற நாய், உடனே குரைத்துக் கொண்டு அனைவரையும் எழுப்பியது. பின்னர், பாம்பை தன்னுடைய பற்களால் பிடித்தது. அந்த நேரத்தில் பாம்பு குறைந்தது 26 முறை நாயை கடித்தது என தெரிவிக்கப்படுகிறது. வீட்டு மக்கள் பாம்பைப் பிடித்து காட்டில் விட்டுவிட்டனர்.

 

 

தொடர்ந்து, மினிக்கு உடனடியாக வெட்டினரி மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. ஆனால், பலவீனமடைந்த மினி 27 மணி நேரத்திற்குப் பிறகு உயிரிழந்தது. தனது உயிரை பணயமாக வைத்து குடும்பத்தை விஷப்பாம்பிடமிருந்து காப்பாற்றிய மினியின் வீரம் தற்போது கிராமம் முழுவதும் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களிலும் இந்த சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. “மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள உண்மை பாசத்தின் சின்னம் தான் மினி” எனக் குறிப்பிட்டு பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.