
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(61). இவர் சொந்தமாக ஜே.சி.பி வாகனத்தை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பாஸ்கரன் கவிதா என்ற பெண்னை காதலித்து இரண்டாவதாக பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 1-ம் தேதி பாஸ்கரன்- கவிதா இருவரும் மதுரை மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். பின்பு மதுரை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் விடுதியில் வந்து தங்கினர்.
மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் விடுதி நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி விடுதிக்கு வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தம்பதியினர் இருவரும் சடலமாக கிடந்தனர்.
இதனையடுத்து இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தம்பதியினர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது அங்கு ஒரு கடிதம் கிடைத்தது.
அந்த கடிதத்தில் அதிகமாக கடன் தொல்லை உள்ளது. கடன் கொடுத்தவர்கள் அதிகமாக நெருக்கடி கொடுப்பதால் நாங்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறோம் என பாஸ்கரனும் கவிதாவும் எழுதி வைத்துள்ளனர்.
எனவே கடன் தொல்லையின் காரணமாக தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.