பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்களின் வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்கவோ, நீக்கவோ எதிர்கொள்கின்ற சிக்கலை எளிதாக்கும் வகையில், வெளியுறவுத்துறை புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. இதற்காக ‘இணைப்பு ஜெ (Annexure J)’ என்ற புதிய பிரமாண பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, திருமண சான்றிதழ் போன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்போது புதிய நடைமுறையில், தம்பதியினர் இருவரும் கையொப்பமிட்டுள்ள பிரமாண பத்திரத்தை மட்டும் சமர்ப்பிப்பதும் போதும்.

பிரமாண பத்திரத்தில் அடங்க வேண்டிய விபரங்கள்:

‘இணைப்பு ஜெ’ பிரமாண பத்திரத்தில், இருவரின் முழுப் பெயர், முகவரி, பிறந்த தேதி, திருமண நிலை, ஆதார் எண், வாக்காளர் அடையாள எண் மற்றும் பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் சேர்க்கப்பட வேண்டும். அதனுடன், இருவரும் சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். இது பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையை மேலும் எளிமை படுத்தும் என்றும், விரைவாக செயல்படும் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மறுமண விவரங்களுக்கு கூடுதல் ஆவணங்கள் தேவை:

மறுமணமாகிய பிறகு, புதிய வாழ்க்கை துணையின் பெயரை சேர்க்க விரும்புபவர்கள், விவாகரத்து ஆணை, மறுமண சான்றிதழ், அல்லது முன்னாள் வாழ்க்கை துணையின் இறப்பு சான்றிதழ் போன்ற ஆதார ஆவணங்களை வழங்க வேண்டும். மேலும் தகவல்களை அறிய, பாஸ்போர்ட் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.passportindia.gov.in/psp இல் பார்வையிடலாம். இந்த புதிய நடைமுறை, பாஸ்போர்ட் சேவையில் மக்கள் சிக்கலின்றி பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.