காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவர் ராணிபேட்டை மாவட்டத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி நரசிம்மன் தலைமையில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து கொண்டிருந்த நரசிம்மன் தனது மனைவியிடம் செல்போனில் சுங்கச்சாவடியில் வேலை பார்த்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த இரவு நரசிம்மன் வீட்டுக்கு வரவில்லை.

மறுநாள் காலை வரை நரசிம்மன் வீட்டுக்கு வராததால் சாலை பணியாளர்களும், உறவினர்களும் சுங்கச்சாவடி அருகே தேடினர். அப்போது நரசிம்மன் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணவில்லை என அறிவிப்பை வெளியிட்டனர்.

இது குறித்து அருகில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பக்ரிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு ஓடையில் அரை நிர்வாண கோலத்தில் ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அதற்கு முன்பே ஜே.சி.பி மூலம் அந்த பகுதி மக்கள் மயங்கிய நபரை மீட்டனர். அப்போது அவர் யார் என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்த போது காணாமல் போன நரசிம்மன் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து போலீசார் நரசிம்மனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கம் தெளிந்த பின்பு நரசிம்மனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது இயற்கை உபாதை களிக்க சென்ற இடத்தில் மயங்கி கீழே விழுந்து என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.