
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் கிடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிப்ரௌலி பகுதியில், 24 வயது குஷி என்ற பெண் தனது கணவருடன் வீடியோ அழைப்பில் ஏற்பட்ட தகராறின் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில் குஷிக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது குஷியின் கணவர் நதீம் அன்சாரி, சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவருகிறார். இவர்கள் இருவருக்கும் சம்பவ நாளில் செல்போனில் பேசும்போது சண்டை ஏற்பட்டது.
இந்த பிரச்சனைக்கு பிறகு நதீம் பலமுறை அழைத்தும் அவரது மனைவி செல்போன் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி தன் மனைவியை சென்று பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் தட்டியபோதும் பதிலளிக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கயிற்றில் தொங்கும் குஷியின் உடலை பார்த்துள்ளார். உடனடியாக தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கதவை உடைத்து, குஷியில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், குஷி மற்றும் நதீம் 4 ஆண்டுகளுக்கு முன்பு மத வேறுபாட்டை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், குஷி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவராகவும், நதீம் கோரக்பூரைச் சேர்ந்தவராகவும் இருந்தது தெரியவந்துள்ளது.
இவர் சம்பவத்திற்கு பிறகு, குஷியின் மாமியார் மருமகளின் உடலையும், குழந்தையையும் ஏற்க மறுத்துள்ளார். இதனால், குஷியின் தாயார், “என் மகளின் இறுதிச் சடங்குகளை நானே நடத்துவேன்; அவளுடைய குழந்தையையும் வளர்ப்பேன்” என உருக்கமாக தெரிவித்தார்.
மேலும் குஷி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.