
பெங்களூரில் சுலைமான்(50) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருமண புரோக்கரான சுலைமான் தனது உறவினரான முஸ்தபா(30) என்பவருக்கு தனது எட்டு மாதங்களுக்கு முன்பு பெண் பார்த்து திருமணம் நடத்தி வைத்தார். இதனையடுத்து முஸ்தபாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முஸ்தபாவின் மனைவி கோபத்தில் அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த முஸ்தபா கடந்த 22-ஆம் தேதி தனக்கு பெண் பார்த்துக் கொடுத்த சுலைமானை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதனையடுத்து முஸ்தபாவிடம் விவரத்தை கேட்பதற்காக சுலைமான் தனது மகன்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு முஸ்தபாவின் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. சுலைமானின் மகன்கள் வீட்டிற்கு வெளியே நின்ற நிலையில் சுலைமான் மட்டும் வீட்டிற்குள் சென்று முஸ்தப்பாவிடம் பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முஸ்தபா சுலைமானின் கழுத்தில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனை தடுக்க வந்த மகன்களையும் முஸ்தபா தாக்கியுள்ளார்.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுலைமானின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.