கிராம நிர்வாகி அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் எழுத வேண்டும் என்றால் 25.4.2025 முதல் 24.5.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசில் இருக்கும் பல்வேறு பதவிகளில் குரூப் 4 தேர்வு அதிக பேர் எழுதும் தேர்வாக உள்ளது. ஒரே கட்டத் தேர்வு, பத்தாம் வகுப்பு தகுதி போதும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கானோர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகப்படியாக 42 வயது வரை இருக்க வேண்டும். வனக்காப்பாளர் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வன காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம். இதர பதவிகளுக்கு 18 வயது முதல் 34 வயது வரை இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு உள்ளது. குரூப் 4 தேர்வு ஒரே கட்ட தேர்வு ஆகும். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும்.

நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்த பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்.