நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டம் சாய்ராம் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கார்த்தியாயினி(34). நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த தினேஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கோபத்தில் கார்த்தியாயினி தனது கணவரை கீழே தள்ளிவிட்டதால் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தினேஷ் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் தினேஷ்குமாரின் கழுத்தை நெரித்ததால் அவரது கழுத்து எலும்பு உடைந்து இறந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் கார்த்தியாயினி யை கைது செய்து விசாரித்த போது அவர் தனது கணவரை கொலை செய்தது ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.