தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் மதுரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பகுதியில் வைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியாக உள்ளார். இவரது மகன்கள் ராமநாதன், லட்சுமணன் ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்கள்.

இவர்கள் இருவரும் மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இந்த பொது தேர்வின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மதிப்பெண் பட்டியலில் இருவரும் ஒரே மதிப்பெண் எடுத்து, அதாவது 459 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளனர். 5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இவர்கள் இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.