
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்த 42 வயதான அலெக்ஸ், தனது மனைவி விக்டோரியா, மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ஆலியா மற்றும் ஆராதனா ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலெக்ஸ் ஜவுளி வியாபாரம் செய்துவர, விக்டோரியா ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார். குடும்பத்தில் நிதி பிரச்சனை இருந்தாலும், தாயின் கேன்சர் சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் செலவழித்து வந்ததும், தம்பிக்காக கடன் வாங்கி தொழில் தொடங்கச் செய்ததும் அலெக்ஸ் மீது கடன் சுமையை அதிகமாக்கியது.
மேலும், மகாலட்சுமி நகரில் வாங்கிய வீட்டுக்காக விக்டோரியாவின் தாயின் ஓய்வூதியத் தொகையை தவணை கட்டணமாக செலுத்தி வந்த நிலையில், சமீபத்தில் அவருடைய மரணத்தால் அந்த வருமானமும் இல்லாமல் போனது.
அதையடுத்து அலெக்ஸின் வியாபாரமும் நஷ்டம் அடைந்ததால், ஏற்பட்ட மன உளைச்சலில் அலெக்ஸ் மற்றும் விக்டோரியா, தங்களது குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து, இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இன்று காலை வீடு திறக்கப்படாமல் இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததோடு, பெட்ரூமில் குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர்.
தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நால்வரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.