கரூர் மாவட்டத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்த மே 1ம் தேதி நடைபெற்றது.  முதன் முறையாக கரூரில்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியுள்ளது.

இதற்காக ரூ.500 முதல் 50 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. 3 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தந்திருந்த நிலையில் அவர்களுக்கு முறையான ஏற்பாடுகள் இல்லாததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

அதிக அளவில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த நிறுவனம் குறைந்த அளவில் இருக்கைகளை வைத்திருந்ததால் நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் பலர் நிகழ்ச்சியை காண முடியாமல் திரும்பி சென்றது வாக்குவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் டிக்கெட் இருந்தும் பொதுமக்கள் சிலரை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்காமல்  தரக்குறைவாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது .

இதில் ஒரு நபர் ரூ.3000 ரூபாய் கொடுத்து வாங்கிய பிளாட்டினம் டிக்கெட்டை நிகழ்ச்சியை கண்டு களிக்க முடியாத ஆத்திரத்தில் கிழித்து வீசியது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் இளையராஜாவின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.