சேலம் மாவட்டம் துக்கியாம்பாளையம் பாலசுப்பிரமணிய நகரை சேர்ந்தவர் வடிவேல்(52). இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வடிவேல் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வடிவேலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வடிவேல் தனியார் வங்கியில் கடன் வாங்கிவிட்டு அந்த பணத்தை திருப்பி செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்று நெருக்கடி கொடுத்தது தெரியவந்தது.

இதனால் தான் மன உளைச்சலில் வடிவேல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.