மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த ஒரு தனியார் பேருந்து விபத்தில் சிக்கி இருந்த வாகனங்களின் மீது மோதியது. இவ்வாறு தொடர்ந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த தகவல் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் சிலரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இந்த விபத்தில் சிக்கிய 3 வாகனங்களையும் சரி செய்யும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். எனவே அப்பகுதியில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.