
அசாம் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் மறைந்த அரசியல்வாதி பிரிகு குமார் புகானின் ஒரே மகள் உபசா புகான் (வயது 28) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவஹாத்தி நகரம், கர்குலி பகுதியில் தாயுடன் வசித்து வந்த உபசா, ஞாயிற்றுக்கிழமை வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அங்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உபசா புகான் நீண்ட காலமாக மனநல சிக்கல்களில் இருந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதற்கு முந்தைய காலங்களில் தற்கொலைக்கு முயற்சி செய்திருந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நேர்ந்த நேரத்தில், அவரது தாயார் வீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்க்கப்படவில்லை. இச்சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி, அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.