ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு (JLN) அரசு மருத்துவமனையில் நேற்று காலை நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவம் பகுதி நேர மருத்துவர் சந்திரபிரகாஷ் மற்றும் ஆண் நர்ஸ் சுரேஷ் சவுத்ரி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தகராறாக மாறி கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவம் மருத்துவமனை சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இது பற்றி மருத்துவர் பிரகாஷ் கூறியதாவது, “பணியாளர்களிடம் குழந்தை தொடர்பான பணிகள் குறித்து அறிவுறுத்தியபோது அவர்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து நர்சிங் இன்சார்ஜிடம் புகார் கொடுக்கச் சென்றபோது நர்ஸ் சுரேஷ் ஒத்துழைக்காமல், கடும் வகையில் எதிர்த்தார்” என தெரிவித்துள்ளார்.

 

 

சந்திரபிரகாஷ் மேலும் கூறியதாவது, “சுரேஷ் எனது மேல் செருப்பால் தாக்கி, பின்னர் இரும்பு தட்டால் அடித்தார்” எனவும் தெரிவித்தார். அதே நேரத்தில் மற்ற நர்சிங் ஊழியர்கள் மருத்துவரை கட்டுப்படுத்தி தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, நர்ஸ் சுரேஷ் தனது பதிலில், “மருத்துவர் தான் அதிகமாகக் கூச்சலிட்டார், தவறான வார்த்தைகளை பயன்படுத்தினார்” என கூறியுள்ளார். இவர் மேலும் தெரிவித்ததாவது, “முறையான பாதுகாப்பு விதிகளை மீறிய பெண் நர்சை அவர் குற்றம் சாடியதால் இந்த வாக்குவாதம் தீவிர பிரச்சனனையாக  மாறியது” என்றும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மிகவும் தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளது. முதன்மை மருத்துவர் அனில் சமாரியா, இருவரும் புகார் அளித்துள்ளனர் என்றும், விசாரணைக்காக மூத்த மருத்துவர் சஞ்சீவ் மகேஷ்வரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நர்சிங் மேற்பார்வையாளர் சேதன் மீனா கூறியதாவது, “ஒரு தரப்புக்கே சாதகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டால், நர்சிங் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் மருத்துவமனை நிர்வாகத்திலும், பொது மக்களிடையிலும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.