உத்தரப் பிரதேசம் காசியாபாத்தில் நடைபெற்ற தேவீ ஜாக்ரன் நிகழ்வில், உணவு தயாரிக்கும் போது ஒருவர் தந்தூரி ரொட்டியில் எச்சில் துப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பக்தர்களுக்காக உணவு தயார் செய்யப்படும் இடத்தில், ஷவேஸ் என்ற நபர் ரொட்டியில் துப்பி பின்னர் அதனை தந்தூருக்குள் வைக்கும் காட்சி பதிவானது. இந்த வீடியோ இணையத்தில் பரவியவுடன்  நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

வீடியோ வெளியாகியவுடன், காசியாபாத் போலீசார் உடனடியாக ஷவேஸை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இது தனிப்பட்ட சம்பவமா அல்லது இதுபோன்ற செயல்கள் ஏற்கனவே பிற இடங்களிலும் நடந்துள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதற்காக நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பி விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும்  சமூக வலைதளங்களில் பலர் இந்த செயலை கடுமையாக விமர்சித்து, குற்றவாளிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.