கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் ஷைனி என்ற 42 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் லோபி லுகோஸ் (44). இந்த தம்பதிகளுக்கு அலினா என்ற 11 வயது மகளும், இவானா என்ற 10 வயது மகளும் இருந்துள்ளனர். இதில் லோபி  அடிக்கடி தன்னுடைய மனைவியுடன் தகராறு செய்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இதில் ஷைனி பிஎஸ்சி நர்சிங் முடித்துள்ளார். இதனால் அவர் செவிலியராக பணிபுரிய விரும்பிய நிலையில் அதற்கும் லோபி விடவில்லை. இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்தார். இதனால் ஷைனி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதோடு விவாகரத்து கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் விவாகரத்துக்காக கோர்ட்டில் விண்ணப்பித்த நிலையிலும் லோபி  தன்னுடைய மனைவியை துன்புறுத்துவதை நிறுத்தவில்லை. இதனால் ஷைனி தன்னுடைய இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு வேதனையில் வீட்டை விட்டு வெளியேறினார். இவர்கள் எட்டுமுனூர் ரயில்வே நிலையத்திற்கு சென்றனர். பின்னர் ரயில் முன்பாக பாய்ந்து மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் மூவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக லோபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.